27 அத்தியாவசிய பொருட்களின் விலை திங்கட்கிழமையிலிருந்து குறைக்கப்படவுள்ளன
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் 27ற்கான விலை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து குறைக்கப்படும். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக வர்த்தக அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 3 மாதங்கள் அமுலாக்கப்படும். இதற்காக, தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நேரடி இறக்குமதியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நிலையான விலை மட்டத்தைப் பேணுவது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தரத்தில் சிறந்த அத்தியாவசியப் பொருட்களை சந்தையில் உள்ள மட்டத்தை விட குறைந்த விலைக்கு விநியோகிக்க முடியும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்கு அரச நிறுவனங்களைப் போன்று தனியார் துறையும் உதவி வழங்க முன்வந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம், செனிடைஸர், முகக்கவசம் உள்ளிட்ட 27 வகை பொருட்களை கொள்வனவு செய்யலாம். லங்கா சதொச, கூட்டுறவு நிலையங்கள், கியு-சொப் விற்பனையகங்கள் ஊடாக நிவாரணப் பொதியைக் கொள்வனவு செய்ய முடியும்.