கிளிநொச்சியில் அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய தொடர்ந்தும் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன
கிளிநொச்சியில் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணி;ப்புரைக்கமைய தொடர்ந்தும் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிவாரண வேலைத் திட்டங்கள் பாரியளவில் இடம்பெற்று வருவாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களுக்கு திரும்புவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் எட்டாயிரத்து 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உலர் உணவுகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்கு முதல் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வரை வழங்கப்படுகின்றன.
இது தவிர சேதத்தை மதிப்பீடு செய்த பின்னர் இரண்டரை இலட்சம் ரூபா வரை இழப்பீட்டை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெள்ளத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஏக்கர் வயலுக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ள வீடுகள், வியாபார நிலையங்கள், கிணறுகள் மற்றும் கழிவறைகளை துப்பரவு செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரச நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.