வடக்கில் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் பத்தாயிரம் ரூபாவை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், வடக்கு அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இதனை குறிப்பிட்டார்.
வெள்ள அனர்த்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தங்கவைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொழும்பு மாநகர சபையால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்கான ஆளணி பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் அதற்கு படையினரை அழைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
மழை, வெள்ளத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்டு நுண்கடன்களை அறவிடுவதை ஒரு மாத காலத்திற்கு தாமதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.